Thursday, April 21, 2011

வெண்மேகம் பெண்ணாக உருவானதோ..

பாடலின் சூழ்நிலை :
 

நாயகன் (தனுஷ்) நாயகி (நயன்தாரா) ஒரே அலுவலகத்தில் வேலை செய்கிறார்கள். நாயகன் வேலைக்கு சேரும்போது நாயகி அவரது மனதை கவர்கிறார். பின்பு ஒருதலையாக காதலிக்கிறார். நாயகன் தனது காதலை சொல்ல அவள் மறுத்துவிடுகிறார். தன்னுடைய மகனுக்கு உதவ நாயகன் தந்தை (ரகுவரன்) நாயகியிடும் பேசுகிறார். அவள் அவரை அவமானம் செய்து விட அவர் மனமொடிந்து இறந்து விடுகிறார். மிகவும் மனமொடிந்துப்போகும் நாயகன் சோகத்தில் உறைந்துப்போகிறார்.

நாயகனின் சூழ்நிலையை பார்த்த நாயகனின் நண்பர் இந்த கவலையை மறக்க அவரை தன்னுடைய கிராமத்திற்கு அழைத்து செல்கிறார். அங்கு சென்ற பிறகுதான் தெரியது நாயகியும்  நண்பரும் சொந்தம் என்று.. தன் தந்தை சாவுக்கு காரணமாவர்... தன் காதலை ஏற்றுக்கொள்ள வில்லை...  சூழ்நிலை காரணமாக அந்த கிராடத்தில் தங்க நேர்கிறது. தன் வலியை அந்த வீட்டில் நடக்கும் ஒரு நிகழ்ச்சியில் பாடுவது போன்று இப்பாடல் அமைந்துள்ளது.

பாடலுக்கான பொருள் :
 
காதல் தோல்வி பாடல்கள் தமி்ழ்திரையில் எவ்வளவோ இருந்தாலும் இந்தப்பாடல் மிகவும் ரசிக்கும்படியிருந்தது.

வெண்மேகம் போன்று இந்த பூமியில் வந்தவ‌ளே உன்னைப்பார்த்ததும் இந்த நெஞ்சம் உன்னை கொண்டாடுகிறது. நீ ஒரு பார்வை பார்த்துவிடு. ஒரு வார்த்தை செல்லிவிடு உன்னால்தானே பல ஞாபகங்கள் என் நெஞ்சில் வந்துவிடுகிறது...

‌பெண்ணே நீ மாலைநேரத்து மஞ்சள் வெயில்... கருமேகத்தில் ஒளிரும் மின்னல் இவ்வளவு அழகிருந்தும் உன்னை பார்ப்பவரை ஏன் தீப்போல் கண்கலங்க வைத்து விடுகிறாய்... பெண்ணே உண்மை சொல்லிவிடு ஒரு புன்னகையில் பெண் இனத்தை கோவபட்டது ஏன்... தேவதைகள் வாழ்வது கண்டிப்பாக வீடாக இருக்காது அது கோயில்தான்.. உனக்குள் இருக்கும் அழகை எப்படி சொல்வது...  நீ எனக்கில்லை என்ற வேதனையில் கண் மூடி ஒரு ஓரம் நான் சாய்கிறேன்.. அப்படி வரும் கண்ணீரில் நான் மகிழ்கிறேன்..
உன்னால் தானே பலஞாபம் வந்தாடுகிறது...

எங்கள் மனதை ‌பார்த்தவுடன் கொள்ளையடித்தாய் அந்த தந்திரத்தை  எங்கு சென்று கற்றுவந்தாய்... விழி அசைவில் வலைவிரிக்கிறாய் நாங்கள் அனைவரும் உன்னை பல்லக்கில் தூக்கிச் செல்ல தயாராக இருக்கிறோம்... உன் விரல் பிடிக்கிற வரத்திற்குதான் நான் உயிரோடு இருக்கிறேன் என் காதல் என்னவாகும் அது உன் பாதத்தில் மண்ணாகிவிடுமோ  சொல் என் அன்பே.... என பாடல் எழுதப்பட்டுள்ளது.

இப்பாடலின் காட்சி அமைப்பு... மழை.. வீட்டின் அழகு.. நடனம் அனைத்தும் அருமையாக அமைந்திருக்கும்.


பாடல் விவரம்:


படம்: யாரடி நீ மோகினி
பாடலாசிரியர் : நா.முத்துக்குமார்
நடிப்பு : தனுஷ், நயன்தாரா, ரகுவரன்

இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்: ஹரிஹரன்
இயக்கம் : எ. ஜவகர்

வெளிவந்த ஆண்டு : ஏப்ரல் 4, 2008.

அந்த பாடல் வரிகள் : 


பல்லவி :
வெண்மேகம் பெண்ணாக உருவானதோ
இந்நேரம் எனை பார்த்து விளையாடுதோ (வெண்மேகம்)

உன்னாலே பல ஞாபகம்
என் முன்னே வந்தாடுதே
ஒரு நெஞ்சம் திண்டாடுதே.. (உன்னாலே)

வார்த்தை ஒரு வார்த்தை
சொன்னால் என்ன?
பார்வை ஒரு பார்வை
பார்த்தால் என்ன?

(உன்னாலே) (வெண்மேகம்
 

சணைம் -1
மஞ்சள் வெயில் நீ மின்னல் ஒளி நீ
உன்னை கண்டவரை கண் கலங்க நிற்கவைக்கும் தீ
பெண்ணே என்னடி உண்மை சொல்லடி
ஒரு புன்னகையில் பெண் இனமே கோவப்பட்டதென்னடி

தேவதை வாழ்வது வீடில்லை கோவில்
கடவுளின் கால் தடம் பார்க்கிறேன்
ஒன்றா இரண்டா
உன் அழகை பாட

கண்மூடி ஓரு ஓரம் நான் சாய்கின்றேன்
கண்ணீரில் ஆனந்தம் நான் காண்கின்றேன்

(உன்னாலே)


சரணம் - 2
எந்தன் மனதை கொள்ளையடித்தாய்
இந்த தந்திரமும் மந்திரமும் எங்கு சென்று படித்தாய்
விழி அசைவில் வலை விரித்தாய்
உன்னை பல்லக்கினில் தூக்கி செல்ல கட்டளைகள் விதித்தாய்

உன் விரல் பிடித்திடும் வரம் ஒன்று கிடைக்க
உயிருடன் வாழ்கிறேன் நானடி
என் காதலும் என்னாகுமோ
உன் பாதத்தில் மண்ணாகுமோ

(வெண்மேகம்)


அந்த பாடலையும் பாருங்கள் :




என் வேலையை நான் செய்து விட்டேன் ரசித்தவர்கள் தயவு செய்து  கருத்து சொல்லிவிட்டு செல்லுங்கள்..
 
அன்பான வாசகர்களே இதை எப்போது படித்தாலும்  தங்களுடைய கருத்தை சொல்லுங்க.. அதுதான் என்னைமேலும் உழைக்க வலுசேர்க்கும்... நன்றி... நன்றி...

Thursday, April 7, 2011

எதிரிக்கும் வேண்டாம் இந்த அவஸ்தை...


பாடலின் சூழ்நிலை :
 

நாயகன் ஒரு பிரபல ரவுடியின் தம்பி.. இவரும் ஒரு ரவுடி.. நியாயத்திற்காக தன் அண்ணனின் கட்டளையை ஏற்று அடிதடி செய்கிறார். இவர் வாழ்வில் ஒரு பெண் குறுக்கிடுகிறாள். இருவருக்கும் அவர்களை அறியாமலே காதல் வயப்படுகிறார்கள். நாயகன் தன் காதலை நாயகியிடம் சொல்லி விட நினைக்கும் போது பயம் அவரை ஆட்கொள்கிறது. அடிதடியில் அமர்க்களப்படுத்தும் அவர் காதலை சொல்ல நினைக்கும் பேர்து தடுமாறுகிறார். இப்படி இருவருக்கும் நெருக்கம் அதிகமாகிறது. ஒரு வழியாக நாயகியே நாயகனிடம்  காதலை சொல்ல வர அடுத்த நாள் நாயகனின் பிறந்த நாள் என்று தெரியவருகிறது. சரி சொல்ல வந்த காதலை நாளை தங்களுடைய பிறந்த நாளில் சொல்வதாக கூறி சென்று விடுகிறார்.. அந்த ஒரு நாள் ஏற்படும் தவிப்பை உணர்த்துவது போன்று பாடல் அமைக்கப்பட்டுள்ளது.

பாடலுக்கான விளக்கம் :
 

என் காதலியின் கண்கள் என்பது என்ன தெரியுமா.. அது என்னை தொடாமலே தொட்டுச் செல்லும் தென்றல் காற்று. என்னுடைய நெஞ்சத்தில் கொட்டுகின்ற மின்னல் ‌எது தெரியுமா.. அது அவள் கண்ணோறம் மின்னுகின்ற காதல்தான் இருப்பது ஒரு நாள்தான் அதுக்குள்ளே உன் மௌனம் என்னை கொன்று விடும்போலிருக்கிறதே. அதனால் தான் நான் காற்றில் பறக்கிற காகிதம் போல் ஆகிவிட்டேன்..


இந்த காதல் என்பது எவ்வளவு கொடுமையாக அவஸ்தை.. நரகத்தில் இருப்பது போன்றே இருக்கிறேன்... தயவு இந்த அவஸ்த்தை என்னுடைய எதிரிக்கூட வரவேண்டாம். நெருப்பை தின்றது போலவும்.. அமிலத்தை (ஆசிட்) குடித்தது போல் இருக்கிறதே.. நோயை கொடுத்தவளே அதற்கான மருந்தை ஏன் தர மறுத்தாய்.. இந்த வாலிபத்தின் தோட்டத்தில் ரகசியமாய் வந்து பூப்பறித்துவிட்டு சென்றவள் நீதானா...

‌பெண்களின் உள்ளம் மிகப்பெரிய படுகுழி.. இதில் விழுந்து எழுந்தவ‌ன்.. அவற்றின் அளவு ஆழம்.. அளந்தவன் எவனுமில்லை.. ஓ.. உலகமே இந்த கடவுள் பூமிக்கு வராதாதற்கு காரணம் என்ன தெரியுமா.. அது காதல் இருக்கிற பயத்தில் தான் அப்படி கடவுள் பூமிக்கு வந்தால் தாடியுடன் தான் இந்த பூமியில் அலைவான் என்று இந்த பாடல் விளக்குகிறது..
 

பாடலின் சில தகவல்கள் :
 

1. இப்படம் 2001 வெளிவந்த வெற்றிப்படங்களில் சிறந்தப்படம்.
2. பாடல் காட்சிகள் இயற்கை சூழலில் மிகவும் ரம்மியமாக அமைந்திருக்கும்.
3. அஜித்தின் பேர் சொல்லக்கூடிய விதத்தில் இப்படத்தை கொடுத்திருந்தார் முருகதாஸ்.


பாடலின் விவரம் :


படம் : தீனா 2001
இசை : யுவன் ஷங்கர் ராஜா
பாடலாசிரியர்: வாலி
பாடியவர்கள் : ஷங்கர் மஹாதேவன்
கதை இயக்கம் : ஏ.ஆர்.முருகதாஸ்.

அந்த பாடல் வரிகள் : 

பல்லவி :

சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்
என் காதல் தேவதையின் கண்கள்
நெஞ்சத்தில் கொட்டி செல்லும் மின்னல்
கண்ணோரம் மின்னும் அவள் காதல்

ஒரு நாளைக்குள்ளே மெல்ல மெல்ல
உன் மௌனம் என்னை கொல்ல கொல்ல
இந்த காதலில் நான்
காற்றில் பறக்கும் காகிதமானேன்

(சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்,)

சரணம் - 1

ஓ....
காதலின் அவஸ்தை  எதிரிக்கும் வேண்டாம்,
நரக சுகம் அல்லவா நெருப்பை விழிங்கிவிட்டேன்,
ஓ... அமிலம் அருந்திவிட்டேன்,

நோயாய் நெஞ்சில் நீ நுழைந்தாய்
மருந்தை ஏனடி தர மறந்தாய்
வாலிபத்தின் சோலையிலே
ரகசியமாய் பூ பறித்தவள் நீ தானே…

(சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்)

சரணம் -2

 ம்.... பெண்களின் உள்ளம் படுக்குழி என்பேன்...
விழுந்து எழுந்தவன் யார்?
ஆழம் அளந்தவன் யார்?
கரையை கடந்தவன் யார்?
காதல் இருக்கும் பயத்தினில் தான்
கடவுள் பூமிக்கு வருவதில்லை
மீறி அவன் பூமி வந்தால்
தாடியோடதான் அலைவான் வீதியிலே,

(சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்)

அந்த பாடலை டவுன் லோடு செய்ய :


சொல்லாமல் தொட்டு செல்லும்
அந்த பாடலைப் பாருங்கள்...




என் வேலையை நான் செய்து விட்டேன் ரசித்தவர்கள் தயவு செய்து  கருத்து சொல்லிவிட்டு செல்லுங்கள்..   
 

இப்பாடல் நண்பர் ஆர்.கே. சதீஷ்குமார்  அவர்களுக்கு. ....

அன்பான வாசகர்களே இதை எப்போது படித்தாலும்  தங்களுடைய கருத்தை சொல்லுங்க.. அதுதான் என்னை உற்சாகப்படுத்தும்... நன்றி... நன்றி...

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...