Monday, August 22, 2011

மேகம் சுரக்கும் பால்...இதில் தைரியமாய் நனையலாம்....


படத்தில் பாடலுக்கான சூழல் :

நாயகன் (அரவிந்தசாமி) தன்னுடைய அண்ணன் (பிரகாஷ்ராஜ்) சொல்லுக்கு கட்டுப்பட்டு திருட்டு வேலையை செய்து வருபவர். அப்படி ஒரு இடத்தில் இரவில் திருட செல்லும்போது உறங்கிக் கொண்டிருக்கும் நாயகியை பார்க்கிறார். அங்கு நாயகியின் டைரியை அவருக்கு தெரியாமல் எடுத்துக் கொண்டு வந்துவிடுகிறார். அந்த டைரியில் நாயகி எழுதி வைத்திருக்கும் கவிதைதான் இந்த பாடல் என சித்தரிக்கப்பட்டிருக்கிறது.

நாயகியை கவர்வதற்க்காக அவருக்கு தெரியாமல் ஒரு நாள் மழையில் நாயகியின் கவிதையை நாயகன் பாடலாக பாடும் படி படக்காட்சிகள் அமைந்துள்ளன. அந்த பாடலை பாடும் நாயகனை நாயகி பின்தொடர்ந்து வருவார்.

பாடலுக்கான விளக்கம் :

வைரமுத்துவிடம் ஒரு காட்சி விளக்கப்பட்டப்பின் அந்தகாட்சியில் மிகவும் ஒன்றிவிடுவார். மேலும் அந்த காட்சி அந்த சூழ்நிலை அவற்றைப் பொருத்து அவர்பயன்படுத்தும் வார்த்தைகள் கவிதையின் உச்சமாக இருக்கும் அப்படி அவர் எழுதிய இக்கவிதையும் மழையின் மகிமையை உச்சத்திற்க்கு கொண்டு செல்வதுதான்.
 சிந்தும் இந்த மழைத்துளியை எடுத்து சேர்த்து வைத்து அதை அந்த மின்னல் கொண்டு மாலையாக கோர்த்துவிடலாம். கொட்டுகின்ற மழையை அப்படியே பிடித்து மழை நீரை அருந்தும் சக்கரவாக  பறவைப்போன்று எனக்கும் இந்த மழை பருக ஆசையாக இருக்கிறது.


மழையை ஒரு துளி விழுது என்பார். ஆலமரத்தில் தொங்கும் விழுதுபோன்று வானிலிருந்து ஒரு துளியாய் விழும் இதுவும் ஒரு விழுது என்று பாடலை ஆரம்பிக்கிறார். இந்த விழுதுகளை பிடித்து அப்படியே வானில் ஏறிவிடலாம் போலிருக்கிறதே...
 

மழை நீர் மிகவும் சுத்தமானது..  (ஆனால் முதலில் வரும் மழை அமில மழை என்று அறிவியல் கூறுகிறது) அந்த தூய நீர் சேரும் இடத்திற்க்கு ஏற்றார் போல் மாறிவிடும். பூவில் தேனாகவும், சிப்பியில் முத்தாகவும் பாவிப்பது மழை நீர்தான் தற்போது அவர் மீது விழுந்ததால் கவிதையாகவும் மாறிவிடுகிறதாம்.

இந்த இயற்கை அன்னை அனைவரும் குளிக்க அமைத்த மிகப்பெரிய ஷவராம்...  இளைய வயதில் மழையில் நனைவது மிகவும் சுகமானது... இந்த இளைய வயதில் நனையாமல் பிறகு எந்த வயதில் நனைவது என்று ஆதங்கத்துடன் எழுதியுள்ளார்


மழை என்பது தூரல், இடி, சாரல், மேகம், வானவில், என அத்‌தனையும் சுமந்து ஒரு கவிதைப்பேன்று வருகிறது அதை எதிர்த்து கதவடைத்தால் எப்படி... மழைப்பெய்தால் குடைப்பிடிப்போம் அதை கருப்புகொடியாக வர்ணனை செய்கிறார்.


மழை என்பது வான்தேவதை நமக்கெல்லாம் தந்த பரிசு யாரும் திரும்பிக் கொள்ளாதீர்கள்.. நெடுஞ்சாலையில் நனைய எவருடைய சம்மதமும் வேண்டாம்.. மழை ‌என்பது மேகம் சுரந்த பால் அதில் நனைவதற்க்கு ஏன் தயக்கம் அப்படி மழையில் நனையவில்லையென்றால் நாம் வாழ்நாளில் பாதி இழந்ததற்க்கு சமம்.. இந்த கண்களை மூடி நனைந்து இந்த மண்ணில் சொர்க்கம் காண்போம் என உணர்வுப்பூர்வமான வடிக்கப்பட்டுள்ளது இக்கவிதை.
 
பாடலுக்கான விவரங்கள் :


திரைப்படம்: என் சுவாசக் காற்றே
வெளிவந்த வருடம்: 1999
இயற்றியவர்: கவிப்பேரரசு வைரமுத்து
பாடியவர்: எம்.ஜி. ஸ்ரீரிகுமார்
இசையமைப்பாளர்: ஏ.ஆர். ரஹ்மான்

அந்த பாடல் வரிகள் :

சுரம் :
ஒரு துளி விழுது ஒரு துளி விழுது
ஒரு துளி விழுது ஒரு துளி விழுது

ஒரு துளி... இரு துளி...
சிறு துளி... பல துளி...

பல்லவி :
 
சின்னச் சின்ன மழைத்துளிகள்
சேர்த்து வைப்பேனோ
மின்னல் ஒளியில் நூல் எடுத்துக்
கோர்த்து வைப்பேனோ
 
அனு பல்லவி:  

சக்கரவாகமோ மழையை அருந்துமாம்
நான் சக்கரவாகப் பறவையானேனோ
மழையின் தாரைகள் ஈரவிழுதுகள்
விழுது பிடித்து விண்ணில் சேர்வேனோ

(சின்னச் சின்ன மழைத்துளிகள் )

சரணம் : 1

சிறு பூவினிலே விழுந்தால் 
ஒரு தேன்துளியாய் வருவாய்...

சிறு சிப்பியிலே விழுந்தால்
ஒரு முத்தெனவே மலர்வாய்...

பயிர் வேரினிலே விழுந்தால்
நவதானியமாய் விளைவாய்...

என் கண்விழிக்குள் விழுந்ததனால்
கவிதையாக மலர்ந்தாய்
 
அந்த இயற்கை அன்னை படைத்த
ஒரு பெரிய ஷவரிது...

அட இந்த வயது கழிந்தால்
பிறகெங்கு நனைவது...

இவள் கன்னி என்பதை இந்த மழை
கண்டறிந்து சொல்லியது

சக்கரவாகமோ மழையை அருந்துமாம்
நான் சக்கரவாகப் பறவையானேனோ
மழையின் தாரைகள் வைரவிழுதுகள்
விழுது பிடித்து விண்ணில் சேர்வேனோ (சின்ன சின்ன)



சரணம் : 2

மழை கவிதை கொண்டு வருது
யாரும் கதவடைக்க வேண்டாம்

ஒரு கறுப்புக் கொடி காட்டி
யாரும் குடை பிடிக்க வேண்டாம்

இது தேவதையின் பரிசு
யாரும் திரும்பிக் கொள்ள வேண்டாம்

நெடுஞ்சாலையிலே நனைய
ஒருவர் சம்மதமும் வேண்டாம்

அந்த மேகம் சுரந்த பாலில்
ஏன் நனைய மறுக்கிறாய்

நீ வாழ வந்த வாழ்வில்
ஒரு பகுதி இழக்கிறாய்

நீ கண்கள் மூடிக் கரையும் போது
மண்ணில் சொர்க்கம் ஏதுவாய்

நீ கண்கள் மூடிக் கரையும் போது
மண்ணில் சொர்க்கம் மீளுவாய்

சக்கரவாகமோ மழையை அருந்துமாம்
நான் சக்கரவாகப் பறவையானேனோ
மழையின் தாரைகள் வைரவிழுதுகள்
விழுது பிடித்து விண்ணில் சேர்வேனோ

(சின்னச் சின்ன மழைத்துளிகள் )


அந்த பாடல் காட்சி :


தமிழ் பாடலில் ஒளிந்துள்ள அறிய கருத்துக்களை வெளிக்கொணர்க்கே இவ்முயற்ச்சி... என் வேலையை நான் செய்து விட்டேன் ரசித்தவர்கள் தயவு செய்து  கருத்து சொல்லிவிட்டு செல்லுங்கள்.. 
 
அன்பான வாசகர்களே இதை எப்போது படித்தாலும்  தங்களுடைய கருத்தை சொல்லுங்க.. அதுதான் என்னைமேலும் பதிவிட வலுசேர்க்கும்...
இதை தங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்துவையுங்கள்...
நன்றி..! நன்றி...!


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...