Monday, May 2, 2011

அத்திக்காய் ஆலங்காய் வெண்ணிலவே.....

பாடலுக்கான சூழ்நிலை :
 

இத்திரைப்படத்தில் சிவாஜி மூன்று வேடம் ஏற்றிருப்பார். அதில் ஒரு வேடம் ‌அப்பாவி பாண்டியன் பாத்திரம். தற்கொலைக்கு முயன்று பின் காப்பாற்றப்பட்டு, நாயகி தேவிகாவை விரும்புவார். அதே போல் சிவாஜியின் தங்கை‌யான நடிகை வசந்தியும் இவரின் காதலராகவும் சிவாஜியின் நண்பனாகவும் நடித்திருப்பவர் பாலாஜி. (இவருதாங்க அஜித் பில்லாவின் தயாரிப்பாளர்) பல்வேறு கலாட்டாவிற்கு பிறகு இந்த இரு ஜோடியும் தனியே வந்து  ஒரே பந்தலில் திருமணம் செய்துக் கொள்கின்றனர். அன்று இரவு நடக்கும் முதலிரவில் செல்ல கோவத்துடன் இந்த இரு ஜோடியும் பாடும் படி இந்த பாடல் அமைந்துள்ளது.

பாடலுக்கான விளக்கம் :

கவியரசர் கண்ணதாசன் தான் பாடல்களில் செலுத்துகின்ற ஆட்சி பாராட்டுக்குரியது. அவருடைய பாடல்கள் காலங்கள் தாண்டியும் வாழக்கூடியது. அவர் எழுதிய பாடலின் விளக்கத்தை தர முன்வருகிறேன். (இது என் அறிவுக்கு எட்டியதுதான். ஏதாவது தவறாக ‌இருந்தால் மன்னிக்கவும்) இப்பாடல் ஏதோ காய் கறிகளை பற்றி பாடப்பட்டது போல் இருக்கும் உண்மையில் அர்த்தம் அலுவல்ல... தலைவன் மீது கோவம் கொண்ட தலைவியும், தலைவி மீது கோவம் கொண்ட தலைவனும், மாறி மாறி செல்லமாய் தண்டிக்கச் சொல்வது போல் இருக்கும்

பெ : அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே என்னைப் போல் பெண்ணல்லவோ?

அத்திக்காய் என்பது அத்திமரத்தில் காய்க்ககூடிய ஒருகாய்.. ஆனால் பாடலில் அத்திக்காய் என்பது திக்கு என்பதற்கு திசை, பக்கம், என்ற அர்த்தங்கள் இருக்கிறது ‌அத்திக்காய் என்றால் அந்த பக்கம் காய்.. காய் என்பது காய்தல் (வெயில் காய்கிறது போன்று இதில் நிலவு) ஆலங்காய். ஆலங்காய் என்பது மிகவும் கசப்பு தன்மைக் கொண்டது கசக்கும் வெண்ணிலவே என்னை காயாதே... அல்லது ஆலங்காய் என்பதின் இன்னோரு அர்த்தம் ஆலம் என்றால் விஷம் என்று அர்த்தம். விஷம் போல காய்கின்ற வெண்ணிலவே என்று பெருள்படுகிறது. இத்திக்காய் என்றால் இந்தப்பக்கமாய் காயதே நான் உன்னைப்போல் பெண்ணல்லவா என்று நாயகி கூறுகிறார்.  

பெ : கன்னிக்காய் ஆசைக்காய் காதல் கொண்ட பாவைக்காய்
அங்கே காய் அவரைக் காய் மங்கை என்தன் கோவைக்காய்


(கன்னிக்காய்=  கன்னிக்காக, ஆசைக்காய் = ஆசைக்காக)
கன்னியாகிய நான் ஆசைகொண்டு காதல் கொண்ட இந்த பெணணுக்காக (பாவை என்றால் பெண் என்று அர்த்தம்.) அதோ அங்கே சென்று அவரைக் காய்... மங்கை என்தன் கோவைக்காய்.. கோ-என்றால் தலைவன், மன்னன் என்று பொருள்.. அதாவது என்னுடைய தலைவனை காய் என்று பொருள்.

ஆ : மாதுளங்காய் ஆனாலும் என்னுளம் காயாகுமோ?
என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ?


மாதுளங்காள் ஆனாலும் என்பது (மாது+உள்ளம்=மாதுள்ளம்) அவளுடைய உள்ளம் காயாக இருக்கலாம் அதாவது என்னை தவறாக நினைக்கலாம் ஆனால் என்னுள்ளம் அதுபோல் இல்லை. நிலவே என்னை நீ காயாதே நீயும் என் உயிர் அல்லவா.

ஆ : இரவுக்காய் உறவுக்காய் ஏங்கும் இந்த ஏழைக்காய்
நீயும் காய் நிதமும் காய் நேரில் நிற்கும் இவளைக் காய்
 
இரவில் நடக்கும் அந்த கூடலுக்காக அதாவது இரவுக்காகவும், அந்த உறவுக்காகவும் ஏங்கும் இந்த ஏழைக்காக உன் நேரில் நிற்கும் எப்போதும் அவளை உன் கதிர்கலால் சுடு (காய்)

பெ : உருவங்காய் ஆனாலும் பருவங்காய் ஆகுமோ?
என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ?

மன்னவனே என்னுடைய உருவம்தான் வெறுப்பது போன்று உள்ளது அதாவது உருவம் காய் போல் உள்ளது ஆனால் என் பருவம் அப்படியில்லை. என் உயிரான என் நிலவே என்னை காயாதே. எப்போதும் என்னுயிரும் நீயல்லவா?

பெ : ஏலக்காய் வாசனை போல் எங்கள் உள்ளம் வாழக்காய்
ஜாதிக்காய் பெட்டகம் போல் தனிமையில் இன்பம் கனியக் காய்

நிலவே... ஏலக்காய் போன்று வாசனையுடன் எங்கள் உள்ளத்தை வாழ வை. வாழக்காய் என்பது வாழ்வதற்காக காய். என்று அர்த்தம். ஜாதிக்காய்ப்போன்று தனிமையில் அதை கனிய விடுவது போன்று எங்களை தனிமையில் இன்பம் காண விடு என்று நிலவிடம் காதலி விண்ணப்பமிடுகிறார்.

ஆ : சொன்னதெல்லாம் விளங்காயோ தூதுவளங்காய் வெண்ணிலா
என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ?

ஓ.. நிலவே இப்போது சொன்னதெல்லாம் விளங்கிற்றா.? ஏன் இப்படி நாங்கள் சொல்வதை புரிந்துக் கொள்ளாமல் இருக்கிறாய் . தூதுவளங்காய் என்பது தூது விளங்காத என்று பொருள்படும். இவ்வளவு சொல்லியும் என்னை நீ காயப்போகிறாயா? என்னை நீ வெறுக்காதே அன்பே நான் என்பது நீ அல்லவா.

ஆ :உள்ளமெலாம் மிளகாயோ ஒவ்வொரு பேச்சுரைக்கயோ?
        வெள்ளரிக்காய் பிளந்தது போல் வெண்ணிலவே சிரிக்காயோ?
 

உன் உள்ளம் என் இளகாதோ (மி என்பதை ம்+இ என்று பிரிப்படும்)  ஏன் மிளகாய் போன்று ஓவ்வோறு பேச்சிலும் உறைக்கிறாய் (காரம்). என்று இரு பொருள்படும். இதைப் பார்த்து ஏன் வெண்ணிலவே சிரிக்கிராய் பிறையானது சிரிப்பு சின்னமாக வெள்ளரியை பிளந்தது போல் இருக்கிறதாம்.

பெ : கோதையெனைக் காயாதே கொத்தவரங்காய் வெண்ணிலவே
‌ஆ : இருவரையும் காயாதே தனிமையிலேங்காய் வெண்ணிலா 

கோதை என்னை காயாதே என்னை கொத்த வரும் வெண்ணிலவே நாங்கள் இருவரும் அன்பை பரிமாறிக் கொள்ள போகிறோம். ஆகையால் எங்கள் இருவரையும் காயாதே நீ தனிமையிலே ஏங்காதே வெண்ணிலவே.
என்று இந்தபாடல் முடிகிறது.


பாடலுக்கான விவரம் :



பாடல்: அத்திக்காய் காய் காய்
திரைப்படம்: பலே பாண்டியா  (1962)
இந்த பாடலில் நடித்திருப்பவர்கள் : சிவாஜி, தேவிகா, பாலாஜி, வஸந்தி.

படியவர்: டி.எம். சௌந்தரராஜன், பி.சுசீலா, 
பி.பி. ஸ்ரீனிவாஸ், ஜமுனா ராணி
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி

அந்த பாடல் வரிகள் :



பல்லவி :
பெ : அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
          இத்திக்காய் காயாதே என்னைப் போல் பெண்ணல்லவோ?

‌ஆ : அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
         இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ?
         என்னுயிரும் நீயல்லவோ?
        அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே..

பெ : ஓஓஓ..ஓஓஓ..

சரணம் : 1 


பெ : கன்னிக்காய் ஆசைக்காய் காதல் கொண்ட பாவைக்காய்
          அங்கே காய் அவரைக் காய் மங்கை என்தன் கோவைக்காய்
          கன்னிக்காய் ஆசைக்காய் காதல் கொண்ட பாவைக்காய்
          அங்கே காய் அவரைக் காய் மங்கை என்தன் கோவைக்காய்

ஆ :  மாதுளங்காய் ஆனாலும் என்னுளம் காயாகுமோ?
          என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ?

பெ : இத்திக்காய் காயாதே என்னைப் போல் பெண்ணல்லவோ?

பெ : ஓ.. ஓ... ஓ.. ஆஹா.. ஆஹா.. 

சரணம் : 2 

ஆ : இரவுக்காய் உறவுக்காய் ஏங்கும் இந்த ஏழைக்காய்
         நீயும் காய் நிதமும் காய் நேரில் நிற்கும் இவளைக் காய்
         இரவுக்காய் உறவுக்காய் ஏங்கும் இந்த ஏழைக்காய்
         நீயும் காய் நிதமும் காய் நேரில் நிற்கும் இவளைக் காய்

பெ : உருவங்காய் ஆனாலும் பருவங்காய் ஆகுமோ?
          என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ?

இரு :அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
            இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ?

இரு : ஆஹா..ஆஹா. ஆஹா.. ஆஹா.. 

சரணம் : 3 

பெ : ஏலக்காய் வாசனை போல் எங்கள் உள்ளம் வாழக்காய்
           ஜாதிக்காய் பெட்டகம் போல் தனிமையில் இன்பம் கனியக் காய்
           ஏலக்காய் வாசனை போல் எங்கள் உள்ளம் வாழக்காய்
           ஜாதிக்காய் பெட்டகம் போல் தனிமையில் இன்பம் கனியக் காய்

ஆ : சொன்னதெல்லாம் விளங்காயோ தூதுவளங்காய் வெண்ணிலா
         என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ?

இரு : அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
             இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ?

இரு : ஆஹா..ஆஹா. ஆஹா.. ஆஹா.. 

சரணம் : 4 

ஆ :உள்ளமெலாம் மிளகாயோ ஒவ்வொரு பேச்சுரைக்கயோ?
        வெள்ளரிக்காய் பிளந்தது போல் வெண்ணிலவே சிரிக்காயோ?
        உள்ளமெலாம் மிளகாயோ ஒவ்வொரு பேச்சுரைக்கயோ?
        வெள்ளரிக்காய் பிளந்தது போல் வெண்ணிலவே சிரிக்காயோ?

பெ : கோதையெனைக் காயாதே கொத்தவரங்காய் வெண்ணிலவே
‌ஆ : இருவரையும் காயாதே தனிமையிலேங்காய் வெண்ணிலா

இரு : அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
            இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ?

ஆஹாஹா ஆஹா ஓஹோஹோ ஹோஹோ ம்ஹ்ம்ம் ம்ம்
 அந்த பாடலையும் ஒரு முறை பாருங்கள் :
 

தமிழ் பாடலில் ஒளிந்துள்ள அறிய கருத்துக்களை வெளிக்கொணர்வதே என் வேலை... என் வேலையை நான் செய்து விட்டேன் ரசித்தவர்கள் தயவு செய்து  கருத்து சொல்லிவிட்டு செல்லுங்கள்..
 
அன்பான வாசகர்களே இதை எப்போது படித்தாலும்  தங்களுடைய கருத்தை சொல்லுங்க.. அதுதான் என்னைமேலும் பதிவிட வலுசேர்க்கும்...
இதை தங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்துவையுங்கள்...
நன்றி... நன்றி...


வாவ் என்று இத்தளத்தைவலைச்சரத்தில் அறிமுகம் செய்த தோழி ஆனந்தி அவர்களுக்கும்..
Xxtraordinary Blogger Award வழங்கிய தோழி சிநேகிதிக்கும்
பாட்டு ரசிகனின் நன்றிகள்...


36 comments:

  1. அருமையான விளக்கம் நண்பரே...இதன் முதல் நான்கு வரிகளுக்கு விளக்கம் எனக்கு ஏற்கனவே தெரியும் என்றாலும், முளுப்பாடளுக்கான விளக்கம் இப்போதுதான் அறிகிறேன்...இதில் ஆலங்காய் வெண்ணிலவே என்பது ஆலமரத்தின் மீது காயும் வெண்ணிலவே என்றுதான் கேள்விபட்டிருக்கிறேன்.உங்கள் விளக்கம் புதுசு...அருமை

    ReplyDelete
  2. நல்ல விளக்கம்.வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்து

    ReplyDelete
  3. மிக பிரபலமான ஒரு இனிய பாடல். அந்த நாளைய பேக்லைட் ரிகார்டில் இரண்டு பக்கமும் இந்த பாட்டு இருக்கும். ஒருபக்கம் முடிந்து மறுபக்கம் திருப்பி போடுவார்கள். அந்த நாட்களில் ரேடியோவில் இதனை கேட்கும் போதும் இடையில் சில வினாடிகள் ஒரு ஆகும். இபோதெல்லாம் இது போன்ற Long Play வருவதில்லை. சிவாஜியின் நடிப்பு ரொம்ப ஓவர் ஆக்டிங்கா இருக்கும்.

    ReplyDelete
  4. நல்ல விளக்கம் .....பழைய பாடல்களை அதிகம் பதிவிடுங்கள் .......

    ReplyDelete
  5. இலக்கிய மணம் கமழும் இனிய பாடல்!

    ReplyDelete
  6. இந்தப் பாடலுக்கான தங்களின் உழைப்பு அபாரம்.. அந்தப் பாடலை பலமுறைக் கேட்டு, அந்தப் படத்தில் எந்தமாதிரியான சூழலில் அது வருகிறது என ஆராய்ந்து உங்களின் வாசகர்களுக்கு தருகிறீர்களே அந்தப் பணிக்கு ஹாட்ஸ் ஆப்...

    ReplyDelete
  7. எனக்கு பிடித்த படம்

    ReplyDelete
  8. கவியரசர் கண்ணதாசன் தான் பாடல்களில் செலுத்துகின்ற ஆட்சி பாராட்டுக்குரியது. அவருடைய பாடல்கள் காலங்கள் தாண்டியும் வாழக்கூடியது.//

    ஆழ்ந்த கருத்துக்களை அள்ளைத்தந்த தங்கள் ரசிகத்தன்னைக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  9. ஃஃஃஃ. தலைவன் மீது கோவம் கொண்ட தலைவியும், தலைவி மீது கோவம் கொண்ட தலைவனும், மாறி மாறி செல்லமாய் தண்டிக்கச் சொல்வது போல் இருக்கும்ஃஃஃஃ

    என் அறிவுக்கும் அப்படித் தான் எட்டுகிறது சகோதரம் அருமை அருமை... நீண்ட நாளின் பின் பாடல் கேட்கிறேன்...

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    அளவுக்கதிகமான பரசிட்டமோல் என்ன செய்யும்.. (Paracetamol Poisoning)

    ReplyDelete
  10. இது ஏற்கெனவே எங்கேயோ படிச்ச நியாபகம்....

    விளக்கங்கள் அருமை....

    ReplyDelete
  11. தமிழ்மணம் என்னாச்சி மக்கா....?

    ReplyDelete
  12. ////
    MANO நாஞ்சில் மனோ said...

    இது ஏற்கெனவே எங்கேயோ படிச்ச நியாபகம்....

    விளக்கங்கள் அருமை....
    ////

    கண்டிப்பாக இருக்காது
    இது முழுக்க முழுக்க என் சொந்த பதிவு தலைவரே...

    இதற்காக நான் கிட்டதட்ட 18 மணி நேரங்கள் செலவிட்டிருக்கிறேன்...

    ReplyDelete
  13. ///
    MANO நாஞ்சில் மனோ said...

    தமிழ்மணம் என்னாச்சி மக்கா....?
    ///


    இது சினிமா சார்ந்த பதிவுகள் என்பதால் தமிழ்மணத்தில் இணைக்க மறுத்து விட்டார்கள்...

    ReplyDelete
  14. இவ்ளோ எல்லாம் யோசிச்சு நான் பட்டு கேட்டதே இல்லை..இந்த பாட்டுக்கு இதான் அர்த்தம்ன்னு இவ்ளோ நாள் தெரியல நன்றி

    ReplyDelete
  15. நான் எப்போதுமே பாடலை மேம்போக்காக ரசிப்பவனில்லை... உங்கள் இடுகையை படித்ததும் ஓரளைவுக்குத்தான் நான் ரசித்திருக்கிறேனோ என்று எண்ணம்தோன்றுகிறது.நல் முயற்சி தொடருங்கள்.

    ReplyDelete
  16. கண்ணதாசன் என்றா சொல்லவா வேணும், உங்கள் விளக்கங்களும் அருமை பாஸ்

    ReplyDelete
  17. விளக்கத்தோட முழு பாடல் வரிகளும் தந்ததுக்கு, நன்றிங்க :)

    ReplyDelete
  18. அருமை சூப்பர்!!
    வாழ்த்துக்கள்...
    எப்பிடி தான் இப்பிடி விளக்கமோ???

    ReplyDelete
  19. கவிதை சாலையில் மலர்கள் தூவுகிறீர்கள்..
    இனிமையான, ரசனைக்குகந்த பாடலுக்கு, அருமையான விளக்கங்கள்..
    வாழ்த்துக்கள்! :)
    http://karadipommai.blogspot.com/

    ReplyDelete
  20. கவிஞர்க்கு நிகர் யாருமில்லை. இது போல், அவர் நிறைய பாடல்கள் எழுதி உள்ளார்.

    ReplyDelete
  21. கவிஞர் கண்ணதாசனைப் போல் இனி ஒருவர் பிறக்கப் போவதும் இல்லை.பிறக்கவும் இல்லை.அவருக்கு நிகர் அவரேதான்.இன்று பல கவிஞர்கள் இருக்கலாம்.ஆனால்........?சந்தனம் சந்தனம்தான்.

    ReplyDelete
  22. இலக்கிய மணம் கமழும் இனிய பாடல்! விளக்கங்கள் அருமை....

    ReplyDelete
  23. அருமை நண்பரே..ரசனையான பதிவுகள்!!

    ReplyDelete
  24. பழைய பாடல்களில் மிகவும் மிகவும் பிடித்த பாடல்.பாடல் முழுதும் காய(யை)ச்சொல்லியே பாடலாக்கியிருக்கிறார்.உங்கள் விளக்கமும் அருமை !

    ReplyDelete
  25. குட்டுக்காய் தட்டுக்காய் ஏங்காய்!!

    ReplyDelete
  26. சிலேடையின் ராஜா..கண்ணதாசன்.. செம இன்ட்ரெஸ்டிங்..!

    ReplyDelete
  27. உங்கள் முயற்சி உண்மையிலேயே மிகுந்த பாராட்டுக்குரியது! எனக்குத் தெரிந்த ஒரு திருத்தம் சொல்கிறேன், “கோதை எனைக் காயாதே கொற்றவரைக் காய் வெண்ணிலா....” இங்கு கொற்றவர் என்பது மன்னவர் என்று பொருள் படுகிறது. உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  28. சிவாஜி கண்ணதாசன் msv பாட்டு ரசிகன் சிறு பிழைகளைத் திருத்திக்கொள்ளுங்கள்.

    ReplyDelete
  29. தூது வழங்காய் என்பதே பாடல் வரி என நினைக்கிறேன்.இலக்கியப்பாடல்.

    ReplyDelete
  30. சகோதரரே,
    தங்கள் முயற்சி பாராட்டுக்குரியது.

    இது எனது கருத்து:
    ஆலங்காய் கசப்பானது என்றும், ஆலம் என்பது விஷம் என்றும் குறிப்பிட்டிருக்கிறீர்கள். இது இரண்டு கருத்தும் அவ்வளவு பொழுத்தமாய் இல்லை!

    சுவைத்துப்பார்த்தால் தெரியும், ஆலங்காய் கசப்பானது அல்ல என்பது! மேலும், ஆலம் என்பது உலகம் என்று பொருள்படும். எனவே, ஆலங்காய் வெண்ணிலவே என்பது உலகமெல்லாம் ஒளிவீசும் நிலவே என்று பொருள் தரும். இந்தக்கருத்து, பாட்டு வரும் மகிழ்ச்சியான சந்தர்ப்பத்திற்கு மிகவும் பொருத்தமாயிருக்கும். இல்லையா?

    ReplyDelete
  31. கருத்தின் பரிமானம் இந்த இணையதள வரம்புக்குள்(4096 characters only) வராததால் கீழ்க்காணும் வலைத்தளத்தில் கிளிக் செய்க -/பூம்பொழில்
    https://isaipaa.wordpress.com/2013/07/07/aththi/comment-page-1/#comment-328

    ReplyDelete
  32. இங்கே "ஆலம்" என்பது "நஞ்சு" என்ற பொருள்பட கவிஞர் எழுதி உள்ளார்...இது அவரே சொன்னது...

    ReplyDelete
  33. அத்திக்காய் காய் பாடல் மிக அருமையான பாடல். பாடலும் இசையும் சேர்ந்து எத்தனை முறை கேட்டாலும் சலிப்பைத் தருவதில்லை. இதில் தமிழின் சிறப்பும் உள்ளது. இத்தனைக் காய்கள் வந்திருந்தாலும் ஒன்றுகூட உண்மையான காயைக் குறிக்க வில்லை. இப்பாடல் குறித்து இந்துப்பெண்கள் தளத்தில் (indusladies.com) பாடலைப் பதிந்தவர் "இந்த அத்திக்காய்ப் பாடல் முழுக்க முழுக்க ஒரிசினல் வரிகள். கண்ணதாசனின் 100% சொந்த கற்பனைக் கவிதை. வேறு எந்த இலக்கியத்திலிருந்தும் எடுத்தாளப்பட்டவை அல்ல. இது ஒன்றே போதும் அவர் கவிதையின் மாட்சி விளக்க!" எனக் குறிப்பிட்டிருப்பார். கண்ணதாசன் தமிழ்ப்பாடல்களை எடுத்தாண்டு எளிமையாய் மேலும் சுவை கூட்டித் தருவதில் வல்லவர். இந்தப்பாடல் கணவன் மனைவியரிடையே ஊடல் உள்ளபோது விருந்தினர் வருகிறார். எனவே, மறைமுகமாக மனைவியிடம் கணவன் என்னென்ன சமைக்க வேண்டும் என்பதுபோல் மறைமுகமாக ஒரு பாடலைக் கூறுவார். அதில் அத்திக்காய் காய் காய் காய் (என் மீது சினம் கொள்ளாதே).....உள்ளம் இளகமாட்டாயோ, பேச மாட்டாயோ என மனைவிக்கு மட்டும் புரியுமாறும் விருந்தினருக்கு அத்திக்காய் , மிளகு, சுரைக்காய் முதலியவற்றைச் சமைக்கச் சொல்வதுபோலும் இருக்கும். முழுப்பாடல் வரிகள் மறந்து விட்டன. 60 களில் குமுதம் இதழில் ஒருவர் பேராசிரியர் சி. இலக்குவனார் கூட்டம் ஒன்றில் இருபொருள்பட உள்ள இப்பாடலைக் கூறியதை எடுத்து எழுதியமை, பெட்டிச்செய்தியாய் வந்திருக்கும். கண்ணதாசன் பாராட்டிற்குரியவர்தான். அதற்காக முழுமையும் அவர் சிந்தனை எனத் தவறாகக் கூறக் கூடாது என்பதால் குறிப்பிடுகின்றேன். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன், தமிழே விழி, தமிழா விழி.

    ReplyDelete

படிச்சி முடிச்சாச்சா..
தட்டிக் கொடுங்கள் அதை அடைக்கத்துக் கொள்கிறேன்...
இல்லையென்றால்
குட்டு வையுங்கள் அதை உரமாக்கிக் கொள்கிறேன்..
தட்டலோ குட்டோ அவசியம் பதிவு செய்யுங்கள்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...